அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர்-19 மற்றும் 20ம் திகதி ஆகிய இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட இவ்விரு துப்பாக்கிகளில் ஒன்று இங்கிலாந்து நாட்டு தயாரிப்பு என அக்கரைப்பற்று பொலிசார் குறிப்பிட்டனர்.
இதே வேளை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (ஒக்-20) மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் உரப்பையால் சுற்றியவாறு மலை இடுக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்த சொட் கண் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டு திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
குறித்த துப்பாக்கி மீட்பு சம்பவத்துடன் தொடர்புபட்டு இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் அக்கரைப்பற்று கண்ணகிபுர பகுதியில் இன்று மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் 43 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்ட சம்பவங்கள் குறித்து அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை